Wednesday, 14 January 2015

விசுவசித்தால் சேசு தருவாரா ?



விசுவசித்தால் சேசு தருவாரா ?
பெரும்பாலோனோர் சாமியைத் தேடுவதே பிரச்சனைத் தீர்வுக்காகத்தான்.  பிரச்சனைத் தீர்ந்ததும் இவர்கள் சாமியையும் அவர் சமையத்தையும் மறந்து விடுவார்கள்.  சேசுவிடம், லூர்துமாதா, வேளாங்கண்ணிமாதாவிடம், புனிதர்களிடம், சித்தர்களிடம் ஆயிரக்கணக்கானோர் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற்றாலும் ஆதிசபையில் அப்போஸ்தலரிடம் சேர்ந்திருந்தது 120 பேர் தான்.
        பிரச்சனைத் தீர்வை வைத்து எந்தச்சாமி – சமயத்தின் உண்மையையும் எண்பிக்கமுடியாது.  மோயீசன் செய்ததுபோல் மந்திரவாதிகளும் செய்தனர்.  இன்றும் செய்கின்றனர்.  எதனால் எந்த அளவிற்குப் பிரச்சனைகள் தீரும் என்பது நம் கணிப்புக்கு உட்படாத ஒன்றாகும்.  அதைவைத்து மன, மதம் மாறுபவர்களைத் தடுக்கவும் முடியாது.  சேசு ஒருபோதும் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கிறேன் வாருங்கள் என்று விளம்பரப்படுத்தவில்லை.  ஆனால் வந்தவர்களை விசுவசித்தவர்களைக் குணப்படுத்துகிறார்.  சுமை சுமக்கிறவர்களைத் தேற்றுவேன் வாருங்கள் என்கிறார்.  இது பாவச்சுமையா ? பிரச்சனை சுமையா ? தம் விண்ணரசை விளக்கி நிறுவுவதில்தான் அவர் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.  என் பெயரால் கேட்பதையெல்லாம் தந்தை தருவார் என்கிறார்.  ஆனால், எப்படி எதைக்கேட்கவேண்டுமென்றும் கற்பிக்கிறார்.  விசுவசித்தால் எல்லாம் நடக்கும் என்கிறார்.  ஆனால் விசுவாசமே கடவுள் அருளால் தான் வரவேண்டியது.  விசிவசித்த அப்போஸ்தலர்களுக்கும் எல்லாம் சுகபோகமாக அமையவில்லை.  அவர்கள் பல இம்சைகளுக்கும் கோர மரணத்திற்கும் உள்ளானார்கள்.  நீ விசுவசிப்பதால் குணமாகுமா ? அல்லது குணமானால் விசுவசிப்பாயா ? யோசித்துப்பார்.! ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு புதுச்சாமியை அனுகுவாயா ? அல்லது எதுவந்தாலும் சாமியிடம் பிரமாணிக்கமயிருப்பாயா ? விசுவாசம் என்பதே வாழ்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் அவரை ஏற்று அவருக்குப் பிரமாணிக்கமாயிருப்பதே: பிரச்சனைகள் எதனால் தீருகின்றன என்பதை எண்பிக்க இயலாது.  நம்பி அழுது உருகி செபித்தால் பிரச்சனைகள் தீரும் என்பீரா ? எப்பொழுதுமா ? ஏன் அப்படிநம்பி அழ எப்போதும் நினைவு எழுவதில்லை ? ஒரு பிரச்னை தீர்ந்தால் அடுத்த பிரச்சனை வரும் தப்பிக்க முடியாது.  இது உலக அமைப்பு மனிதர் நினைப்பதையெல்லாம் செய்து வைக்கும் சாமியோ சக்தியோ எங்கும் இல்லை: இறைவன் சித்தமே நம் பாக்கியமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.  உண்மையான செபத்தில் ஒன்று பிரச்சனைகள் தீரும்; அல்லது இறைவன் திருவுளத்தை ஏற்பதில் அதிகப்பற்றுதல் ஏற்படும்.
குறிப்பு: சிலரது போதகமே தங்களை உயர்த்திக்கொள்ளும் வகையாக இருக்கிறது.  தம் செபத்தால் யாவருக்கும் பிரச்சனைத் தீரும் என விளம்பரப்படுத்துகிறார்கள்.  இது உண்மையானால் உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் போகும்படி செபிக்கட்டுமே! கர்த்தர் இதோ வருகிறார், அதோ வருகிறார்... என்று மக்களைப் பயம் காட்டி மனந்திருப்ப முயல்கிறார்களாம்.  இது ஒரு பொய் பிரச்சாரம் நம்பாதீர்கள் என்று ஆண்டவர் சொல்கிறார்.  காட்சி 20 ன் படி தாங்கள் மட்டும் கர்த்தருடன் நடுவானத்தில் 1000 ஆண்டு (ஆயிரம் ஆண்டு) வாழ்வார்களாம்.  இது ஒரு தவறான விளக்கம்.  ஆயிரம் ஆண்டு என்பது நெடுநாள்.  நடுவானம் என்பது இவ்வுலகிலேயே மோட்சவாழ்க்கை வாழ்வதாகும்.  இது கிறிஸ்து உயிர்த்ததிலிருந்து உலகம் முடியும் வரை உள்ள காலகட்டத்தில் அவரிலேயே கலந்து வாழ்வதைக் குறிக்கும்.  அதற்குப்பின் சாத்தானுக்கு இடம் தரப்படும் என்பதை அதோடு சாத்தான் சோதிப்பதற்கும் இடம் உண்டு என உணர்க.  இதை மாற்றி, ஆயிரம் ஆண்டு நடுவானத்தில் வாழப்போகின்றோம்...பிறகு சாத்தான் சோதனை வரும் என்பது ஆகமத்தை பரிகாசம் பண்ணுவதாகும்.  கர்த்தர் மீண்டும்வருவதுஉலக முடிவில் யாவருக்கும் இறுதித்தீர்ப்பு அளிக்கவே.  ஒவ்வொரு செயலிலும் இதை நினைவிருத்த வேண்டுமென்பதே வருகை பற்றிய உண்மைப் போதகம்.  யாராயினும் கிறிஸ்துவைப் போதிக்கும் அளவுக்கு நல்லதுதான்;  ஆனால் கத்தோலிக்கத்தின் போதகத்தை அனுசரித்துப் போதிப்பதே மோட்சம் தரும் போதகமாகும். 
இரட்சிக்கப்பட்டுவிட்டோமா?
       இஸ்பிரித்து சாந்துவால் ஞானாஸ்நானம்: சுட்டப்படுவது “பாஷை” பேசும் வரமாகும்.  இராயப்பர் தம் பாஷையில் பேசினார்.  ஜனக்கூட்டத்தில் உள்ளவர் தத்தம் பாஷையில் புரிந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சி மறுபடி எந்த இடத்திலும் நிகழ்ந்ததாகச் சொல்லப்படவில்லை உள்ளப்பூரிப்பினால் பொங்கி எழும் குரல் பரிசுத்த ஆவியின் நிரப்புதலால் ஏற்பட்டதாக அப்போஸ்தலர்பணியில் சொல்லப்படுகிறது.  1 கொரிந் 12-14 ல் இப்படிப் பேசுபவரே பெரியவர் என நினைத்தவரைக் கண்டித்து எல்லோருமா பாஷை பேசுவார்கள்? அவரவர்க்கு அவரவர் வரம் உண்டு; எல்லோருக்கும் வேண்டியது அன்பு; அது உங்களிடம் இல்லை என்பதைச் சின்னப்பர் சுட்டுகிறார்.  இந்த பாஷை பூரிப்பால் எழுவது அதன் பொருளை விளக்குபவர் இருந்தால்தான் பேசவேண்டும் என்கிறார் புனித சின்னப்பர்.  பூரிப்பால் பொங்கி எழுவதை விளக்குபவர் இல்லை என்பதற்காக எப்படி நிறுத்தி வைக்க முடியும்? இது ஏற்பட்டால்தான் பரிசுத்த ஆவி வருகிறார் என நினைப்பவர் ஆடல்பாடல் மேளதாளம் கூச்சல் கும்மாளம் முதலியவற்றால் நரம்புகளைத் தூண்டி எழுப்பி அரற்றுகிறார்கள்.  இப்படியெல்லாம் செய்து பரிசுத்த ஆவியை மடக்கிவிட முடியுமா ? ஆண்டவரும் அப்போஸ்தலரும் இப்படிச் செபித்ததாக நற்செய்திநூல்களில் எங்கும் இல்லையே..!
      சேசு என்ற பெயரை மீட்பின் அடிப்படையில் (இரட்சண்ய) உச்சரிப்பதும் பரிசுத்த ஆவியின் அருளால்தான் சாத்தியமாகும்.  தெளிவான புத்தியுடன் சேசுவுக்காக வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் பரிசுத்த ஆவியால் தான் வரும்.  பரிசுத்த ஆவியைக்காட்ட முடியாது, உணரமுடியாது அவரை விசுவசிக்கின்றோம்.  பரிசுத்த ஆவியாலும் நெருப்பினாலும் ஞானாஸ்நானம் என்றால் கட்டைகளை பரற்றி நெருப்பு ஏற்றி அதில் ஆட்களைப் போட்டு வதக்கி எடுப்பதும்கூடப் பொருத்தமாக வரலாம், ஆவியும் கிளம்பும். பாஷைகள் பல பேசப்படும்... இதெல்லாம் கூச்சல்கும்பலின் வித்தைகள்.  உனது உள்ளம் தூய ஆவியால் நிரம்பினால் அதை நீ நற்செயல்களால் காட்டு.  தம்பட்டம் அடித்துக்கொள்ளாதே.  பாஷை பேசுவதால் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்பவர் தம்மையே திருப்திப்படுத்திக்கொள்கின்றனர்.  கிறிஸ்துவின் சொற்படி கதோலிக்க அருட்சாதன அன்பு வாழ்க்கை வாழ்பவர்தான் இரட்சண்ய வழியில் செல்கிறார்.           

இராயப்பரின் தலைமைத்துவம்


இராயப்பரின் தலைமைத்துவம்
இன்று இறைவன் இல்லை என்பார் வேரிலிருந்தே வெட்டி ஒதுக்கப்படுகின்றனர். இறைவன் உண்டு என்றாலும் கர்மமறுபிறவிவாதிகள் எப்படியாவது மனிதன் முக்திக்கு ஏற்ற பலனை அந்தந்தக்கட்டத்தில் அந்தந்த மத அனுசரணைப்படி பெற்று அனுபவிப்பான் என்று சொல்வதுடன் ஒவ்வொருவரும் இறைவன் பக்கத்தில் போய்ச் சேரும்போது தாம் சொல்லும் கொள்கையில்தான் ஈடுபட்டிருப்பர் என்ற அளவிற்குத் தத்தம் கொள்கைகளை உயர்த்திப்பேசுவர்.  ஆனால் இவர்கள் யாரும் கடவுள் சித்தம் அவர்தரும் மறை அதன்படி நடந்தால் மோட்ச சன்மானம் : இன்றேல் தண்டனை என்ற அடிப்படையைச் சேர்ந்தவர் அல்ல.  நான் என்பதே என் ஜீவாத்துமாதான் என்று துவக்கி பரிணாம அடிப்படையில் செல்வதால் அவர்களுக்கும் அபிரகாம் வம்ச அடிப்படைக்கும் ஒருபோதும் ஒத்துவரப்போவதில்லை யூத, இஸ்லாமிய மதங்கள் இறைவனை படைப்பின் கர்த்தராகவும், சட்டம் தருபவராகவும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் மதமும் கிறீஸ்தவ வழியும் ஒரே அடிப்படையில் எழுப்பப்பட்ட கட்டடங்களாக அமையும். ஆனால், கடவுள் தாம் முன் அறிவித்தபடியே மனிதனாய், கிறீஸ்துவாய் பிறந்து ஒரு மதத்தையும் அதன் பொறுப்பாளர் ஆசார அனுஷ்டானங்கள் யாவற்றையும் அமைத்துத்தந்திருப்பதால், இனிவேறு எந்த வழியும் செல்லாது எனும் கட்டத்தில் யூதரும் இஸ்லாமியரும் பழைய ஏற்பாட்டிற்குள்ளே நின்றுவிடுகின்றனர்.
                கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களில் விவிலியத்தை ஏற்றுக்கொண்டாலும் அதில் உள்ள பழைய ஏற்பாட்டு எகோவாவையோ, அல்லது தீர்ப்பு நாள் பற்றியும், பரிசுத்த ஆவி பற்றியும் பேசும் ஆகமங்களையோ அடிப்படையாக எடுத்துக்கொண்டு, கிறீஸ்து நிறுவிய வழிக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  மார்டின் லூதர் காலம் தொட்டு வந்த பலதனித்தியங்கிகள் வேதாகமங்களையும் இவற்றிக்குத் தங்கள் தலைவர்கள் கொடுக்கும் விளக்கங்களையும் ஏற்றுக்கொண்டு, அதுவரை ஊரோமை ஆயாராம் பாப்பானவருக்கு உட்பட்டிருந்தாலும் 16-ம் நூற்றாண்டிலிருந்து தலைமைத்துவத்திற்கு உட்படாமல் கிறீஸ்துவைப் பின்பற்றுகிறார்கள்.  கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினர் எனப்படுவோர் 11-ம் நூற்றாண்டு வரை ஊரோமை சபை ஆயர்முறைகள் யாவற்றிற்கும் உட்பட்டிருந்தாலும் சில பிரச்சனைகளின் சூழ்நிலையில் ஊரோமாபுரியுடன் தொடர்புகொள்ளதவராய் அன்று முழுச்சபையில் உணரப்பட்ட சகல கிறிஸ்துவ முறைகளையும் ஏற்றுத் தனித்து வாழ்பவராயினர்.  உரோமன் கத்தோலிக்க சபையினர், ஆதித்தொட்டு கிறிஸ்து ஏற்படுத்திய தலைமைப்பீடத்திற்கு அறவுரை, அர்ச்சிப்பு, ஆட்சி யாவற்றிலும் அந்தப் பீடத்தின் சொற்படி நடந்ததால்தான் கிறிஸ்துவை உண்மையில் பின்பற்றியவராவோம் எனும் கொள்கையுடையவராய் என்றும்போல் பாப்பானவர் சொற்படி அனைத்திலும் செயல்படுபவராயினர்.
      இந்த எல்லா மறை-முறையினரும் கத்தோலிக்கத்தில் ஒன்றுபட வேண்டுமானால், எந்தக் கட்டத்திலிருந்து பிரிந்து நிற்கின்றாரோ அந்தக் கட்டத்திலிருந்து அவர்கள் ஊரோமை ஆயராம் பாப்பனவருக்கு உட்பட்டு அதிலிருந்து கத்தோலிக்கம் சொல்லும் எல்லா சத்தியங்களையும் ஆசார அனுஷ்டானங்களையும் (பரம்பரைசடங்குமுறைகளையும்விதிகளையும்) ஏற்றுக்கொண்டால்தான் ஒற்றுமை என்பது சாத்தியமாகும்.  எல்லாவற்றையும் மறந்துவிட்டு வெறும் மனிதர் என்ற முறையில் ஒன்றுபடுவோம் என்றால், கிறீஸ்துவில் தரப்பட்ட வழியையும் வாழ்க்கையையும் இழந்தவராவோம் வெறும் பைபிள் அல்லது கிறிஸ்து போதும் என்பது இவற்றின் பொருள் என்ன என்று கேட்கப்போகும்போது பெரும் சிக்கல்களுக்குள் நம்மை மாட்ட வைத்துச் சின்னாபின்னமாக்கிவிடும். ஏதாவது ஒரு தலைமைப்பீடத்தையும் சட்டநூலையும் அமைத்துக்கொண்டு ஏகோபித்து வாழ்வோம் என்றால் அது வெறும் மனித சமரச முறையே தவிர இறைவழியாகாது.  நாத்திகம், இந்தியம், யூதம், இஸ்லாம், ஆகூவினம் – யேகோவா இனம், தனித்தியங்கிகள் கீழ்நாட்டு சபைகள் என்ற வெவ்வேறு படிகளைக்கடந்து கத்தோலிக்கத்துக்குள் வரும்போது, யாவரும் பாப்பானவருடைய அறவுரை, அர்சிப்பு, ஆள்கைக்கு உட்படவேண்டியவராகின்றனர்.  இந்தப் பாப்பனவரை கிறிஸ்துவே நியமித்தார் என்பது தெளிவானால் கிறிஸ்துவை ஏற்கும் அளவிற்கு வந்த யாவரும் ஒரே கிறிஸ்துவ கத்தோலிக்க மறையுடலாக ஆவர்.  பாப்பானவர் – இராயப்பர் இவர்களுடைய தலைமைத்துவம் எப்படிப்பட்டது என்பது நாம் கிறிஸ்துவின் முன் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.
      கிறிஸ்து ஏற்படுத்திய விண்ணரசில் இராயப்பரும் பன்னிருவருக்கும் பொறுப்புகள் அளிக்கபடுவதை நற்செய்தி நூல்களிலும், அப்போஸ்தலர்பணி எனும் நூலிலும் காண்கிறோம்.  இராயப்பர் ஆதிச்சபை மக்கள் மனதில் ஆழமாய் பதிந்து நிற்கிறார் என்பது அவர்களது புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்து தெளிவாகிறது. 
      இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத் 16:16) நாமே நல்ல ஆயன் (எசேக்கியேல் ஆகமத்தில் சொல்லப்பட்ட யாவேயாகிய ஆயன் நினைவுட்டப்படுகிறார்.) என் ஆடுகள் என்னை அறியும்,  என் கிடையைச் சேராத ஆடுகளும் உண்டு அவற்றையும் நான் கூட்டிச்சேர்க்க வேண்டும்.  இதனால் ஒரே ஆயனும் ஒரே மந்தையுமாகும்.  என் ஆடுகளுக்காக நான் என் உயிரைக் கொடுக்கிறேன் (அரு:10) என் ஆடுகளையும் ஆட்டுக் குட்டிகளையும் மேய்ப்பாயாக (அரு 21/15-17), அ.ப 20:28) உனக்காக வேண்டியிருக்கிறேன்.  நீ திருந்தியபின் உன் சகோதரரைத்திடப்படுத்து. (லூக் 22:32) அழிவின் (நரகின்) பேய்களின் சக்திகள் (வாயில்கள்) என் சபையை மேற்கொள்ளமாட்டா  (மத் : 16:18) நான் உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன் (மத்: 28:20).  இராயப்பருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் எத்தகையது என்பதை இதிலிருந்து கண்டுணர்க.
      ஆதிசபையில் எல்லாவகையிலும் அவர் முதலிடம் வகுத்துச் சபையை நடத்தி வந்தாரே, அவருடைய முதன்மைத்துவம் எத்தகையது என்பதைச் சிந்தித்துணர்க.
      மத் 16:16 – இராயப்பரது விசுவாச அறிக்கைக்காக அவரைப்பாராட்டுவது வெறும் பேச்சு ஆகாது.  பாராட்டும் சந்தர்ப்பத்தில் பொறுப்பையும் வாக்களிக்கிறார், பின்பு கொடுக்கிறார் (அரு:21:15).  அவரும் ஆதி சபையில் பொறுப்புடன் செயல்படுகிறார்.  புதிய ஏற்பாட்டிலேயே கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக அதிகமான தடவைகள் சொல்லப்படும் (மக்கள் மனதில் எழும் முக்கியமானதாக நினைக்கப்படும்) பெயர் இராயப்பருடையதுதான். அப்போஸ்தலர் பட்டியல் ஒவ்வொன்றிலும் அவர் பெயர் முதலில் வைத்துச்சொல்லப்படுகிறது (மத் 10:2, மாற்: 3:16, லூக் 14:14, அ.ப. 20:28) மத்தேயு 10:2)PROTOS  முதல்வர் என்றே சொல்லப்படுகிறார்.  வெறும் வயதில், வரிசையில், மரியாதையில் முதல்வரா ? அல்லது பொறுப்பில் முதல்வரா ? அவருக்குத் தனிப்பெயர் சூட்டப்படுகிறது. (அரு 1.42, மாற் 3.16, மத் 16.18) அவர் திருத்தப்படுகிறார் (மத் 15.23)  அவரது மறுதலிப்பு முன் அறிவிக்கப்படுகிறது.  பசாசு அவரைச் சிதறடிக்கத் திட்டமிட்டுருபதையும் அவருக்காக சேசு பிதாவை மன்றாடியிருப்பதையும், தான் திருந்தியபின் தன் சகோதரரைத் திடப்படுத்த வேண்டிய பொறுப்பையும் கிறிஸ்து உணர்த்துகிறார். (லூக் 21.31-32)  தனி முறையில் அவர் குறிப்பிடப்படுகிறார்.  உன்னை மனிதரைப் பிடிப்பவனாகுவேன் (லூக் 5.10) எனக்கும் உனக்கும் சேர்த்து வரியைக் கொடு (மத் 17.23).  அவரது பாதத்தை கழுவுகிறார் (அரு 13.6) முதலாவது அவருக்குக் காட்சி கொடுக்கிறார் (லூக் 24.34).  கலிலியாவில் காட்சி கொடுப்பேன் என்று அவசர அவசரமாக அவருக்குச் செய்தி சொல்லியனுப்புகிறார் (மாற்: 16.7).  அவருக்குத் தனி விதமாய்க் காட்சி கொடுத்தார் (லூக் 24.34)  அவரது அன்பு தனிவிதமாய் உறுதிப்படுத்தப்படுகிறது (அரு 21.15).  உயிர்த்தப்பின் கல்லறைக்கு இராயப்பரும் அருளப்பரும் ஓடினாலும் முன் ஓடிய அருளப்பர் இராயப்பருக்காக காத்துக்கொண்டு வெளியே நிற்கிறார் (அரு 20.5)  நான் மீன் பிடிக்கப்போகிறேன் என்று இராயப்பர் சொன்னவுடன் மற்றவர் நாங்களும் உங்களோடு வருகிறோம் எனும்போது, ஆண்டவர் கரையில் நின்று ஏவி மீன் கிடக்கச்செய்தவுடனே அவரிடம் இராயப்பர் ஓடுவதும் எல்லாம் அவரை முக்கியஸ்தராகக் காட்டுகின்றன. மக்கள் மத்தியிலும், பன்னிருவர் மத்தியிலும் எந்தச் சம்பவத்தை எடுத்தாலும் இராயப்பர் முதல் ஆளாக இருக்கிறார்.  இந்த முதன்மைத்துவம் எப்படிப்பட்டது ?
      இராயப்பரைப் பற்றி ஜோசப் குல்மன் சாஸ்திரியார் எழுதிய “PETER” எனும் நூலில் ஆதிசபையின் வாழ்க்கையிலும் ஏடுகளிலும் இராயப்பர் வகிக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது, நிச்சயமாகக் கிறிஸ்து அவருக்குத் தாம் ஏற்படுத்திய திருச்சபையில் முதன்மையான முழுப்பொறுப்பை, அதன் நிருவாகப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்பது தெளிவு என்கிறார்.  மற்றவர்கள் எந்தக்காரனத்தை முன்னிட்டும் அவரைக் கௌரவப்பபடுத்த எண்ணி அவரை முதற்படியில் தூக்கி வைக்கவில்லை, அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது முழு நிருவாகப்பொறுப்பே (Primacy of Jurisdiction not merely of honour) வெறும் கௌரவ முதன்மையல்ல.  இதை அவருக்கு அளித்தது கிறிஸ்துவே.  இதைஒப்புக் கொள்ளாவிட்டால் ஏதோ கிறிஸ்து நல்ல மனிதர், முன்மாதிரியானவர், நல்ல நீதி முறைகளைச் சொன்னார் அல்லது நமது மரியாதைக்கும் வழிபாட்டிற்கும் கூட உரியவராவார் என்று சொல்லும் அளவுக்குத்தான் புதிய ஏற்பாட்டு நூல்கள் புரியும்.  அவர் சீடர்களை அழைத்து செபத்துக்குமேல் தெரிந்தெடுத்து, பயிற்றுவித்து, சாவிகளையும் பொறுப்புகளையும் ஒப்படைத்து, சென்று போதித்து ஞானஸ்நானம் கொடுக்கும்படி பணித்ததும், இந்த அடிப்படையில் அப்போஸ்தலர் பணிபுரிந்ததும் படிப்போர் கண்ணுக்குத் தென்படாததாகிவிடும். முழு உண்மையையும் ஒத்துக்கொள்வதானால் நமக்கு வழிவகுத்துத்தரவந்த இறைமகன் கிறிஸ்து புனித இராயப்பரைத் தம் சபைக்கு மந்தைக்கு தலைமைப் பொறுப்புடையவராக நியமித்துச் சென்றார் என ஏற்று விசுவசிக்க வேண்டும்.        

Sunday, 11 January 2015

இன்றைய கத்தோலிக்க ஆலயங்கள்



இன்றைய கத்தோலிக்க ஆலயங்கள்
ஞாயிறு கடன் திருநாட்களில் பூசை காண வேண்டும் என்பதற்காகத்தான் கோவிலுக்குப் போகிறேன். திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் என்ற பழைய உத்தமமனஸ்தாப செபமுடிவு இன்னும் என் நிலைவில் இருப்பதால் தான் என்ன மாற்றம் வந்தாலும் பேசாமல் இருக்கிறேன். ஆனால் இன்றைய குரு துறவியருடைய நடவடிக்கைகள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. கோயிலில் அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் எரிச்சலையும் குழப்பத்தையும், கோபத்தையும் தூண்டுவதாகத்தான் இருக்கிறது. என்றாலும் வாயைத் திறந்தால் பழிவாங்கிவிடுவார்கள் (அவர்களுடைய கல்விநிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியைகளை தூரந்தொலைவிற்கு இடமாற்ற மாறுதல், வேலையை காலி செய்து விடுதல்) நமது உலக வசதிகள் மட்டுமல்ல, ஆன்ம காரியங்களும் தடைபடுமாகையால் எதற்கும் ஒன்றும் சொல்லாமல் “ஆமா சாமிபோட்டுக்கொண்டு பொய்வேடம் பூண்டு வாழ்கிறோம்.......என்பவர் பலர்.
     குருக்கள் தமக்கு விண்ணிலும், மண்ணிலும் சகல அதிகாரங்களும் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் துறைக்கல்விப் பயிற்சி மற்றவர்களுக்கு இல்லாததல் அவர்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று தைரியம் ஒரு பக்கமும், மற்ற துறைகளில் எவ்வளவோ பாண்டித்தியம் பெற்றவர்கள் முன் இவர்களது உலகக் கல்வி ஞானம், சூனியம் என்ற தாழ்மை மனப்பான்மை (Inferiority complex) ஒரு பக்கமும் இவர்களை தாழ்ச்சியும் தன்னடக்கமும் இன்றி முரடர்களாய் மூர்க்கர்களாய் நடக்கச் செய்கிறது. ஆன்மீகப் பயிற்சியின்றி ஆணவம், போட்டி, பொறாமை, சதி, சூழ்ச்சி, பொருளாசை, புலன் இன்பங்கள் முதலிய வேகங்கள் முன் இவர்கள் காற்றில் பறக்கும் தூசியாக, துரும்பாக மாறி அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பெரும் இடைஞ்சலாக ஆகிறார்கள். கோள் சொல்பவர்கள் இவர்களை வைத்துப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை. அல்லது பிறர் மீது கொண்ட பகையினால் அவர்கள் மேல் இவர்களை நாய்களைப் போல் ஏவி விடுகிறார்கள் என்பதை உணரக்கூடிய நிதானபுத்தி இவர்களிடம் கிடையாது. தீர விசாரியாமல் பிறர் மேல் நடவடிக்கை எடுப்பது பாவம் எனும் உணர்வின்றித் தம் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்து (Misuse) தமக்கடியில் உள்ளவர்களைத் தண்டிக்கிறார்கள். இதனால் இவர்களை உள்ளத்தில் மதிப்பவர் இவர்களது இழிநிலையை அறியாத மிகவும் சொற்பமான அப்பாவிகள் தான்.
     குடும்பத்தில் ஒருவர் சாமியார் அல்லது கன்னியராகி விட்டால் அவரது வீட்டாரது பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இன்று பரவலாக தென்படுகிறது. எனவே இவர்களது அழைப்பு இறைவனால் வருவது என முடியாது. அப்படியே வந்தாலும் இவர்கள் தம் சுய நலத்துக்காகவும் தம் உற்றார் சுற்றத்தாருக்காகவும் சுகபோக வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். உண்மையான அழைப்பும் அர்ப்பணமும் உள்ள குரு துறவியர் இன்று அபூர்வமாகி வருகின்றனர்.
     என்ன பணியை மேற்கொண்டாலும் அதிலிருந்து பணத்தையும் புகழையும் சுரண்டிக்கொள்வதில் அரசியல்வாதிகளுக்கும், இவர்களுக்கும் வேறுபாடு இல்லை. எனவே இவர்களது கோயில் உரைகளும் மோட்ச, நரக பாவ புண்ணிய, இரட்சண்ய சம்மந்தமுள்ளனவாய் இல்லாமல் உலோகாதயக் கோட்பாடுகளுக்குள்ளேயே அடங்கி மக்களையும் திருச்சபையையும் குழப்பத்துக்கு உள்ளாக்குவனவாய் அமைகின்றன. யார் சொல்லையும் கேட்கும் பக்குவம் இவர்களிடம் இல்லை. இந்தத் தான் தோன்றிகள் நடத்தும் வழிபாடு எப்படி இருக்கும்?
     இன்றைய பூசை நடக்கும் பீடம் என்பது ஏதாவது ஒரு பெரிய அல்லது சிறிய மேசையாகும். (பீடத்தின் நடுவில் அர்ச்சிஸ்ட்ட கல் முன்புள்ள பீடங்களில் இருக்கும்) அதன் ஒரு பக்கம் குருவும் மறு பக்கம் மக்களுமாகும். அனைவரும் ஒன்று கூடி வந்து ஒருவர் ஒருவரோடு கலந்து பழகி, கைகுலுக்கி சிரித்து, தத்தம் கருத்துக்களை அச்சம் கூச்சம் எதுவும் இன்றிப் பகிர்ந்து மகிழ்வதற்கு இது வாய்ப்பை அளிக்கிறது. பெண்கள் மினுக்காகப் பீடத்துக்குள் பணிபுரிவதால் அவர்கள் தோற்றத்தைக் கண்கூசாமல் பார்த்து சுவைப்பதற்கு இளைஞர்கள் கூடி வரத் தூண்டும் சூழ்நிலை கோயிலுக்குள் கிடைக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்குக் கோயில் கவர்ச்சியான ஓர் ஊர்ச்சாவடி ஆகிறது. பூசைப் பணம், காணிக்கைப் பொருட்கள், இளம் பெண்களுடைய காந்தம் முதலியவை குருக்களுக்குப் பலவகைகளில் ஆதாயமாகின்றன. இளைஞர்கள் அவர்களைச் சுற்றி வருவதால் தாம் எதையோ சாதித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதற்குத் தான கோயில் குளங்களை அரும்பாடுபட்டு அமைத்தளித்தார்கள் நம்முன்னோர்கள்? இப்படியெல்லாம் நரவலில் முளைத்த பயிராக வருங்கால சமுதாயம் கோயிலில் உருவாகும் என அவர்கள் நினைத்திருந்தால் அதற்காகத் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தத்தம் செய்திருப்பார்களா? அவ்வாறு தத்தம் செய்த வகைகளை அவர்களுடைய வாரிசுகள் மீண்டும் தங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டால் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அப்படி ஒரு சூழ்நிலை வராமல் போகாது என நினைக்கிறேன். 1965க்கு முன் இருந்த கோயில் அமைப்பு வழிபாடு, பக்தி பரவசம் வாழ்க்கைப் பக்குவம் யாவற்றையும் அனுபவத்தில் கண்டவர்களுக்கு இன்றைய போக்குகள்  விபரீதமாக, தாறுமாறுகள் நிறைந்ததாக, எரிச்சலை ஊட்டுவதாக, நாளுக்குகொரு பேச்சும் பாடமும் குழப்பமும் எழுந்து அமைதியை அழிப்பதாக, மோட்ச கதியை மறந்து நாத்திக நரக பாதையில் போவதாகத் தோன்றுவது 1965க்குப் பின் பிறந்தவர்களுக்கு வியப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
     இன்று இளந்தலைமுறைகள் பிற மறை நிறுவனங்களில் கல்வி பயில்கின்றனர். 1965க்குப் பின் பிறந்த அவர்களது பெற்றோருக்கு நம் பரம்பரையான கத்தோலிக்க வாழ்க்கை முறை அனுபவமில்லை. படிப்படியாக திருச்சபை திருவை இழந்து தடம் புரண்டு திசை மாறிப்போவதை இயல்பானதாக நினைக்கிறார்கள் அவர்கள். கத்தோலிக்க நிறுவனங்கள் பரம்பரையாக வந்த போதகங்களை விட்டுவிட்டு எதையெல்லாமோ சொல்லிக் கொடுப்பதால் கத்தோலிக்கக் கல்வி என்பது இன்று இல்லை.
     விசுவாச அடிப்படைகளும் சன்மார்க்க சட்டங்களும் உணர்வுக்குள் வராத ஒரு கிறிஸ்துவம் (கத்தோலிக்க மறை) இன்று நம் கோயிலைச் சுற்றி உருவாகி விட்டது. இதை உணர்த்துபவர்கள் பழைமை விரும்பிகளாகப் பழிக்கப்படுகிறார்கள் : சீக்கிரம் செத்து விடுவார்கள் : பிறகு நாம் வைத்தது தானே சட்டம் என்று இளம் குரு துறவியர் நினைக்கத் துணிந்து விட்டனர்.
     ஞாயிறு அனுசரனை இன்று இல்லை. எல்லா இடங்களிலும் சரீர பிரயாசையான வேலைகள் நடக்கின்றன. கோயிலுக்குப் பலர் போவதேயில்லை. ஏன் வரவில்லை என யாரும் அவர்களைக் கேட்பாரும் இல்லை. கோயில் மாற்றங்கள் எவ்வளவு கசப்பாக இருந்தாலும் பழைய ஆட்கள் கோயில் செல்கின்றனர். இளைஞர்கள் குரு துறவியரது வலைக்குள் சிக்கியவர்கள் மட்டும் கோயிலில் முதல் ஆளாய் நிற்கின்றனர் : இவர்களை  நம்பித்தான் கோயில் நடக்கிறது. ஆனால் எல்லா வீடுகளிலும் குடும்ப அட்டையும் வசூலும் இருப்பது தெரிகிறது. இதைக் கொண்டுதான் பெயர் வைப்பது, தாலிக்கட்டுவது, புதைப்பது ஆகிய மூன்றும் நடக்கிறது. இவைகளைக் கொண்டும், நிறுவனங்களைக் கொண்டும் குரு துறவியருக்கு நல்ல துட்டு (மறைமாவட்டப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து சமய ஆசிரியர், ஆசிரியைகளிடம் தங்களது மாத வருவாயில் ஒரு சதவீதத்தை நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது (என்ன கொடுமை) பாவ உணர்வும், பாவ சங்கீர்த்தனம், தப முயற்சிகள் வாடிக்கையான கட்டுப்பாடுகள் அனுசரணைகள் எதுவும் இல்லை. அதே சமயத்தில் விழாக் கொண்டாட்டங்கள் கோயில் வரும்படியின் சாதனங்களாயிருப்பதால் விடாமல் நடத்தப்படுகிறன. இவற்றில் கத்தோலிக்கரை விட பிறரே அதிகக் காணிக்கைகளைக் கொடுக்கின்றார்கள் என வேண்டும். இது தான் கசப்பான உண்மை நிலை. இந்த நிலையில், தம் பாவ உணர்வை மழுப்புவதற்குப் பெந்தகோஸ்த்துக் கூட்டம் உதவுவதால் பலர் அங்கே செல்கின்றன்ர். இவர்களிடம் அருட்சாதனங்களும் அதிகார உரிமை கொண்ட நிருவாகமும் இல்லை. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் : பைபிளைப் பிடித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் வாதிக்கலாம். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது கத்தோலிக்கத்துக்குள் நன்றாக வளர்ந்து விட்டது. மாதா, புனிதர், உத்தரிப்பிடத்தோர் பற்றிய நினைவு மங்கிவிட்டது. எம்மதமும் சம்மதம் : எல்லோருக்கும் மோட்சம் : உரிமைப் போராட்டம் தேவை என்பதே கொள்கை. திருப்பலியில் இன்னும் பல பழைய செபங்கள் இருக்கின்றன. ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை. சடங்காச்சாரங்கள் பீட அமைப்பிலிருந்து, அப்ப ரசப் பகிர்வு வரை அத்தனையும் பதிதர் என்று 1965வரை கண்டனம் பண்ணப்பட்டவரது பாணியைச் சேர்ந்ததாகும். ஏன், போதக நூல்களும் விவிலியம் பூசைப் புத்தகம் யாவும் அவர்களுடைய வாதங்களை ஆதரிக்கும் பாடங்களைக் கொண்டனவாக மாற்றப்பட்டுள்ளன. பேயின் தலையை நசுக்கப்போவது மாதா அல்ல. மாதா கன்னியல்ல : அவள் கருவுற்றிருக்கும் ஓர் இளம் பெண். சேசுவைப் பெற்ற பின் சூசை அவளுடன் உடலுறவு கொண்டார் : வேறு பிள்ளைகளைப் பெற்றார்.. இன்னும்  திருச்சபையின் தலைமை இடம் பாப்பு அல்லது மேற்றிராணிமாரிடம் (சீமோன் இராயப்பர், மற்ற அப்போஸ்தலரிடம்) இல்லை. அப்போஸ்தலர்களின் விசுவாசம் எனும் பாறை மீதே கட்டப்பட்ட திருச்சபை இது. பாறை என்பது சீமோன் இராயப்பர் இல்லை. இனி கத்தோலிக்க விவிலியம் இல்லை : கொடுக்கப்பட மாட்டாது : இருக்கிற பழைய புத்தகங்களெல்லாம் அடுக்காளைக்குள் போடப்பட்டுவிட்டன. பொது விவிலியம் தான் இனி விலைக்குக் கிடைக்கும் : ஆசிரியர், புதுத் தம்பதிகள் .... மற்றும் சாமியாரை அண்டுவோர் அனைவருடைய தலையிலும் வைத்துக்கட்டப்படும். என்னே கத்தோலிக்க ஆயர் குரு துறவியரின் கொடுமை, சதி, திருட்டு வேலைகள்.
     பாப்பனவர் சொல்வதைக் கேட்காமல் கையில் நன்மை வாங்குவதை எதிர்த்து ஒரு சாத்தான் கூட்டம் சுற்றிக்கொண்டு திரிகிறதாம். உணவு, உறவு, பகிர்தல், நீதி, விடுதலை வேட்கை முதலிய உலோகாதயப் பண்புகளைத்தான் நற்கருணை குறித்துக் காட்டுகின்றதாம். இவற்றை ஓரங்கட்டி நற்கருணையில் பிரசன்னம் தேவையற்ற வாதங்களால் மையத்தில் வைக்கப்பட்டுவிட்டதாம் : பதிதரை கண்டனம் செய்வதில் பல நூற்றாண்டுகள் உருண்டோடி விட்டனவாம். இன்று இந்நிலை மாறி மேற்படி பண்புகள் மையத்துக்கும் நற்கருணையில் பிரசன்னம் ஓரத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளனவாம் : ஆகையால் அதைக் கையில் வாங்குவதால் ஒன்றும் தப்பு இல்லையாம்.  இதை எந்தப்பாப்பனவர் சொன்னார்? அப்படிச் சொன்னால் அவர் இன்னும் கத்தோலிக்கர் ஆவாரா? எந்த ஆயர் குழு சொல்லிற்று? இது தான் நற்கருணை என்று போதித்தால் எந்த ஆயருக்கு யார் தான் கீழ்ப்படிய வேண்டும்? நற்கருணையே ஒன்றுமில்லையே, பிறகு ஆயரும் அவரது கூலிப்படையாகிய குரு துறவியரும் ஒரு பொருட்டா?
     ஆயர் குழுவும் குரு துறவியரும், விடுதலை இறையியல் எனும் நாத்திகத்தை எல்லா சாதனங்கள் மூலமும் பரப்பி வருகிறார்கள். திருப்பலியில் வந்த மாற்றங்களின் கொள்கையும் ஆகமங்களின் கொள்கைத் தொகுப்புகளும் மேற்படி “இரைஇயல் நாத்திகமுமே. இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் துரோகிகள், மந்தைக்குள் புகுந்த ஓநாய்கள், இவர்களை விரட்டியடிப்பதே விசுவாசிகளின் பணி. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுவரனை நேசி. முந்த முந்த விண்ணரசைத் தேடு. கடவுளையே அண்டினாலும் உலோகாதயக் கண்ணோட்டத்தோடு மட்டும் அண்டுவது ஒருவகை நாத்திகமே. அந்தும் துருவும் அறிக்காத இடத்தில் சேர்த்துவை.