Tuesday, 18 November 2014

புனித சின்னப்பர்


புனித சின்னப்பர்
     சின்னப்பர் தனி வழிக்காரரா? சின்னப்பர் கதையே ஒரு தனி!?. அவர் சேசுவுடன் கூடி வாழ்ந்து அனுபவித்தவராகத் தெரியவில்லை. கிறிஸ்துவர்களைத்தாக்கி, உபாதித்துக்கொல்லும் எதிரியாவார். முடியப்பரைக் கொல்லும் போது அவர் கிறிஸ்துவரின் எதிரிகளுடைய (சாட்சிகள், கொலைத்தீர்ப்பை நிறைவேற்றுவோர்) துணிமணிகளுக்குக் காவலாய் இருந்தாராம் (அப்.பணி 8:58) தமாஸ்கு போகும் வழியில் விண் ஒளியாகக் கிறிஸ்துவைக்கண்டு கண் ஒளி இழந்த நிலையில் ஆண்டவரே! நான் என்ன செய்யவேண்டுமென்று கேட்ட போது, தமாஸ்கு பட்டணத்துக்குப் போ, அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார் கிறிஸ்து. அங்கே மூன்று நாள் செப, தபத்துக்குப் பிறகு அனனியாவிடம் சென்று கண் ஒளி பெற்று, ஞானஸ்நானம் பெற்று (அ.ப.9:18) புற இனத்தாருக்கும் அரசருக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் எனது பெயரை(புதுமையை) அறிவிக்க என்னால் தெரிந்து கொள்ளப்பட்ட கருவி என்று ஆண்டவர் இவரை அனனியாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்(9:15) தமாஸ்குவிலேயே கிறிஸ்துவைப் போதித்து யூதர்களை கலங்கடித்தார்(9.22) அவரைத் தொலைக்க யூதர் திட்டமிட்டனர்(23). இது கண்டு கிறிஸ்தவர்கள் கூடையில் அவரை வைத்து நகரவாயிலில் விட்டு மறைமுகமாக வெளியேற்றினர். அவரோ எருசலேம் சீடருடன் சேர்ந்து கொள்ள முயன்றார். அவர்களோ அஞ்சினர். அப்போது பர்னபா அவரை அப்போஸ்தலரிடம் கொண்டு போய் ஒப்படைத்தார். விபரங்களையெல்லாம் அவர்களுக்குச் சொன்ன பின் அங்கே துணிந்து போதித்தார். முக்கியமாக கிரேக்க மொழி பேசுவோரிடம் வாதித்து வந்தார். அவர்களோ அவரைத் தொலைக்கப்பார்த்தனர். சகோதரர்கள் (திருச்சபையினர்) அவரைத் தார்சஸ் நகருக்கு அனுப்பிவைத்தனர் (9:31). அந்தியோக்கியாவில் சிதறிப்போன யூதக் கிறிஸ்துவரிடமிருந்து வேதத்தைப் பெற்ற கிரேக்கர் மனந்திருப்பின செய்தி எருசலேமிற்கு எட்டவே பர்னபா அங்கு அனுப்பபட்டார். அவர் திரளான மக்களை மனந்திருப்பி பிறகு தார்சு பட்டணத்திலிருந்து சவுலை (சின்னப்பரை) தேடிக்கொண்டு வந்து, இருவருமாக அந்தியோக்கியாவில் வேதத்தை போதித்தனர். எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டபோது அந்தியோக்கியரது பண உதவியைப் பர்னபாவும், சவுலுமாக எடுத்துக்கொண்டுபோய்க் கொடுத்து உதவினர்.(11.30). இதன் பிறகு (அப்.பணி 13:13) சின்னப்பரது வேத போதகப்பணி துவங்கின. அ.ப.15-ல் எருசலேம் பொதுச் சங்கத்தில் விருத்த சேதனம் பற்றிய இராயப்பரின் தீர்மானத்தைச் சவுல், அந்தியோக்கியாவிற்கு எடுத்துச் செல்கிறார்(15:35)
     வெவ்வேறு பயணங்களை மேற்கொண்டு சபைகளை நிறுவியதும், அந்தந்த சபையாருடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களுக்கு வேண்டிய பொறுப்பாளர்களை நியமித்து, புத்திமதிகளைச் சொன்னதும் அப்போஸ்தலர் பணி 15க்குப் பின்னும், மற்றும் நிருபங்களிலும் காண்க. எருசலேமில் முளைத்து வேரூன்றி வளர்ந்து, பரவி கடைசியில் நற்செய்தி சின்னப்பர் மூலம் உரோமாபுரி நோக்கிச் செல்வதை நயமாக லூக்காஸ் வருணிப்பதை அப்போஸ்தலர் பணியில் காண்க. சின்னப்பர் கிறிஸ்துவின் மீட்பு அவரின் அன்பு, இன்பம், மனித பாவநிலை முதலியவை பற்றிய அரிய தம் விளக்கங்களால், முக்கியமாய் புற இனத்தார் மத்தியில் கிறிஸ்துவ அடிப்படைகளை நிலை நாட்டுவதையும், சபைகளைத் தப்பறைகளிலிருந்தும், போலித் தீர்க்கதரிசிகளிடமிருந்தும் கண்ணும் கருத்துமாகச் காத்து நயமாகவும், பயமூட்டியும் விசுவாசிகளைப் பேணிக்காத்து வந்ததையும் காணும் போது, சின்னப்பர் ஒரு தனி என்றே சொல்ல வேண்டும்.
     உரோமன் கத்தோலிக்கர் இராயப்பரையும், புரோட்டஸ்டாண்டர் சின்னப்பரையும் பின்பற்றுகின்றனர் என்று விளையாட்டாகவும் ஓரளவுக்கு வினயமாகவும் கூடச்சொல்லும் ஒரு பேச்சு உண்டு. இதற்கு ஏற்றாற்போல் சின்னப்பர் நான் கேபா(இராயப்பர்)வையே எதிர்த்தேன் (கலா.2:12) (against his face I resisted him) எனவே இவர் இராயப்பரைப் பற்றிச் சட்டை பண்ணவில்லை என்பதாகச் சொல்வதா? நானும் அப்போஸ்தலன்தானே (1கொரி 9:1). நான் மனிதரால் அல்ல, சேசுவாலும், பரமபிதாவாலும் அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட்டவன் (கலா 1:1, தீமோ1:11, 1தீமோ 2:7, தீத் 1:1). இன்னும் போலி அப்போஸ்தலர் பற்றி (2 கொரி 11:5-13)ப் பேசிக்கண்டிக்கிறார். 2கொரி 8:23-ல் நாங்கள் அனுப்பிய சகோதரர்களோ, சபைகளின் அப்போஸ்தலர்கள் : கிறிஸ்துவுக்கு மகிமையாயிருப்பவர்கள்..., அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டுங்கள் எனும் போது சபைகளால் அனுப்பட்டவர் என்ற பொதுப் பொருளில் அப்போஸ்தலர் எனும் பதம் பயன்படுவதைக் காண்க. 1கொரி:15-9-ல் நான் அப்போஸ்தலரிலேயே மிகத்தாழ்ந்தபடிச் சேர்ந்தவன் : திருச்சபையைத் துன்புறுத்தியவனை, காலம் தவறிப் பிறந்தவன் என்றும் சொல்வதையும் காண்க. சின்னப்பரும் பன்னிருவரைப்போன்று அப்போஸ்தலர் தானா? அவர் இராயப்பருக்கு உட்படவில்லையா? சபையில் ஏதேச்சாதிகாரம் பண்ணிக்கொண்டு வந்தாரா? இதனால் இராயப்பர் – பன்னிருவர் ஸ்தானாதிபதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று ஒன்றும் இல்லையென்பது பெறப்படுமா?
     எதிர்த்தேன்என்பது மறுக்க முடியாதது. ஆனால் அதிகாரத்தை எதிர்ப்பது வேறு, எதிர்க்காரணங்களைச்சொல்லி வாதாடுவது வேறு. இன்னும், நடிப்பு “பாவலாவுக்காகவும்வெளித்தோற்றத்திற்காகவும் எதிர்த்தேன் என்பது வேறு. வெறும் சொல்லோடுநிற்காமல் நடந்தது என்ன என்பதைச் சிந்திக்கவும்.
     எதிர்த்தேன்என்று சொன்ன அதே கலாத்தியர் நிருபத்தில் 1:18-ல் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப்போனேன், அங்கே பதினைந்து நாள் அவருடன் தங்கியிருந்தேன். மற்ற அப்போஸ்தலருக்குள் ஆண்டவரின் சகோதரரான யாகப்பரைக் கண்டேன் (அவரைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை) என்கிறார். இந்த இருவரையும் காணவும் அவரிடம் பேசவும் வேண்டிவந்த தேவை என்ன? இதற்கு நியாயமான பதிலைக்காண்க : இராயப்பர் திருச்சபையின் தலைவர் என்ற முறையிலும், யாகப்பர் எருசலேம் சபையின் தலைவர் என்ற முறையிலும்தான் அவர்களை மட்டும் எருசலேமில் சந்தித்தார் என்பது பொருத்தமாகாது என்றால், இவர்களை மட்டும் பார்ப்பதற்கென்று பயணம் செய்ய வேண்டிய காரணம் வேறு எதுவாக இருக்க முடியும்?
     விருத்தசேதனம் உள்ளவர்களின் அப்போஸ்தலனாகும்படி இராயப்பருடன் செயலாற்றியவரே, புறவினத்தாரின் அப்போஸ்தலனாகும் படி என்னுள்ளும் செயலாற்றினார். அந்த அருள் எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் என மதிக்கப்பட்ட யாகப்பர், கேபா, அருளப்பர் ஆகியோரின் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்ணபாவுக்கும் கை கொடுத்தனர். விருத்த சேதனம் உள்ளவர்களுக்கு நாங்களும் நற்செய்தி அறிவிப்பது என்று ஏற்பாடு செய்து கொண்டோம் (அதாவது அந்தியோக்கியா சபையார், எருசலேம் சபையாரைப் பஞ்ச காலத்தில் மறக்காமல் உதவ வேண்டும் எல்லாம் ஒரே சபையார் என்பதை நினக்க வேண்டும்) என்று மட்டும் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு உதவி செய்வதில்தான் நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன் (2:7-19).
     இதுவரை கேபாவுடைய அதிகாரத்துக்கு எந்த எதிர்ப்பும் இல்லையே? அருளை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் எனப்பட்டவர் கைகொடுத்து, ஏழைகளை மறக்கலாகாது என்று நினைவூட்ட அதன்படியே தான் நடந்து கொண்டதாகச் சொல்லும் போது அதிகாரத்துக்கு விரோதமான எதுவுமில்லையே! (ஆங்காரியாய் அடக்கி) அதிகாரம் பண்ணுவது சரியல்ல என்று ஆண்டவர் (மாற்கு 10:42) சொல்லியிருக்கிறார். பொறுப்பை நிறைவேற்ற பணித்திருக்கிறார். இதன்படி தூண்களாய் இருந்து கேபா முதலியோர் கைகொடுப்பதும் அவர்களது நிபந்தனைகளுக்குச் சின்னப்பர் உட்பட்டுச் செயலை புரிவதுமே இங்கே விளங்குகிறதேயொழிய, அதிகார மறுப்பு இங்கு இல்லையே! அந்தியோக்கியாபுரி வந்த போது கேபா செய்வது கண்டனத்துக்குரியது என்பதற்காக நேருக்கு நேராக எதிர்த்தேன் என்கிறார். கேபா என்ன செய்தார்? ஏன் நேருக்குக் நேராக எதிர்த்தார்?
     கிறிஸ்து சேசுவுக்குள் யூதனென்றும் அன்னியன் என்றும் இல்லை. இந்த அடிப்படையில், அந்தியோக்கியாபுரி வந்த இடத்தில் கேபா பிறப்பால் யூதனாயிருந்தும் புறவினத்தாருடன் கலந்து உண்டு வந்தார். ஆனால் ஒரு நாள் எருசலேமிலிருந்து யாகப்பரைச் சேர்ந்த சிலர் அங்கு வந்த போது அவர்கள் என்ன சொல்வார்களோ எனப்பயந்து, அன்றிலிருந்து புற இனத்தாரோடு கலந்து உண்பதை நிறுத்திக் கொண்டார் இவ்வாறு இன வேறுபாடு காட்டித் தங்களை ஒதுக்கப்பட்ட, கீழ் இனத்தவராக மதித்தார் என்று அந்தியோக்கியாவின் புற இனத்தார் மனது புண்பட்டு, வருந்தி முறையிடத்துவங்கினர். அந்தியோக்கியா அப்போஸ்தலரான பர்னபாவும் கூட கேபாவை பின்பற்றத் துவங்கக் கண்டதும், புற இனத்தார் முறையீடு அதிகமாவது இயல்புதானே? இனி அவர்களைச் சாந்தப்படுத்துவது யார்? எப்படி?
     சின்னப்பர் ஒருவர் தான் மிஞ்சினார். இராயப்பர் செய்வது சட்டப்படி சரியோ, தவறோ. அது பற்றிக்கேள்வியில்லை. ஆனால் அவர் செயலால் இன்று தம் சபையினர் முறையிடுவது மட்டும் தெளிவு. எனவே இவர்கள் எல்லோரும் பார்க்கும் படியாக இராயப்பரை நேருக்கு நேராகக் கண்டனம் பண்ணினால் தானே இவர்கள் மனது நிம்மதி அடையும்! எனவே தான் இதை ஒரு பெரிய தவறாகக்காட்டி இராயப்பருடன் வெளியளவில் வாதாடுகிறார். இதனால் புற இனத்தாருக்கு திருப்தி ஏற்படுமல்லவா? எதிர்த்த விபரம் இவ்வளவுதான்.
     இதை ஏன் இவ்வளவு பெரிதாகக் காட்டி இங்குச் சொல்கிறார்? இந்த நிருபத்தில் சின்னப்பர் கோபக்கனலைக் கக்குவதை காண்க. ஓ அறிவிலிகளான கலாத்தியரே! உங்களை மயக்கியவன் யார்? (3:1) நான் சொன்னதை விட்டு விட்டு நீங்கள் பழைய சட்டங்களைக் கடைப்பிடிப்பது ஏன்?  கிறீஸ்து – விசுவாசத்தால் மீட்படைகிறோம் என்றல்லவா நான்சொல்லியிருக்கிறேன்!. என் சொல்லை நீங்கள் மதிக்காமல் போனது என்ன? நான் யாரென்று உங்களுக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது?  திருச்சபையின் தூண் எனக்கூடிய கேபாவையே நான் எதிர்த்துக் கண்டித்துப்பேசியிருக்கிறேன். என்னை லேசாக  நினைத்துக்கொள்ளவேண்டாம் (கமாலியேலிடம் யூதச் சட்டங்களை கற்றுத் தேர்ந்தவன்) உங்களை நான் சும்மா விட்டு விடுவேன் என்று நினைக்காதீர்கள்.. என்று அச்சுறுத்தி வழிப்படுத்தும் தோரணை புரியவில்லையா? தூணாயிருந்து கை கொடுத்து அனுமதித்த தலைவரையே துணிந்து எதிர்த்தவன் நான் : உங்களைச் சும்மா விடமாட்டேன் எனும் தோரணையைச் கவனிக்கவும். இதில் சின்னப்பர் இராயப்பரைத் தமக்கும் மேற்பட்டவராகக்  கருதுகிறாரா? சம்மானவராகவோ – தாழ்ந்தவராகவோ கருதுகிறாரா?
     அந்தியோக்கியாவில் எதிர்த்தது புற இனக்கிறிஸ்தவரைச் சாந்தப்படுத்துவதற்காக ஆகும். அச்சம்பவத்தை கலாத்தியருக்கு நினைவூட்டி தான் யாரென்று காட்டும் போது, அதில் இராயப்பர் தனக்கு மேற்பட்டவர் என்பதைச் சொல்லாமல் உணர்த்துவதைக் காண்க.
     இராயப்பருடைய தவறு அப்படி ஒன்றும் பெரியதல்ல என்பதையும் நினைக்கவும். கிறிஸ்துவுக்குள் வேறுபாடு இல்லை. புற இனத்தான் கொர்னீலியஸ் இராயப்பருக்குச் செய்த உபசரணையையும் ஏற்றார். (அப்.10:23) அந்தியோக்கியா புற இனத்தாருடனும் உண்டார் (கலா.2:12). ஆனால் மற்ற யூதர்கள் சிலர் கிறிஸ்துவர்கள் ஆன பின்னும் இன்னும் அவ்வளவு பக்குவடையாமல் இருப்பது கண்டு அவர்களை பகைத்துக் கொள்ளாமுறையில் புற இனத்தாரோடு உண்பதை (வெளிநடிப்பாக 2.13) நிறுத்திக்கொண்டார், அவ்வளவுதான். இதைப் புற இனத்தார் பெரிய அவமானமாக எடுத்துக்கொண்டதால், தரும சங்கடமான நிலைமை எழும்ப, அதை சின்னப்பர், நான் அடிக்கிறாற்போல் அடித்தால், நீ அழுகிறாற் போல் அழு என்றது போல எல்லோருக்கும் முன்பு துணிச்சலாக (பாவலாவாக நடித்து?)க் கண்டிக்கிறார். இராயப்பர் சூழ்நிலைக்கேற்றவாறு அற்பக் காரியத்தில் நடக்க முயன்றது இன்னும் முழுப்பக்குவம் அடையாதவர்களுக்கு இடறலாகத் தென்பட்டது : அது இராயப்பரும் சின்னப்பரும் உணர்ந்த ஒன்றுதான்.
     இராயப்பர் மட்டுமல்ல, சின்னப்பரும்தான் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் நடந்திருக்கிறார். அதாவது அற்பக் காரியங்களில். அதில் தப்பு ஒன்றும் இருந்ததாக யாரும் நினைத்ததில்லை. விருத்தசேதனம் தேவையில்லை என்பது அ.ப.15ஆம் அதிகாரத்தீர்மானம். இதைச் சின்னப்பரே பெற்றுக்கொண்டு அந்தியோக்கியாபுரி சென்றவர். ஆனால் அ.ப.16-ல் லிஸ்திரா சென்ற சின்னப்பர் யூத இனத்தைச் சார்ந்த தாயின் வற்புறுத்தலுக்கிணங்க, தகப்பன் கிரேக்க இனத்தைச் சார்ந்தவனாக இருந்தபோதும், இவர்கள் மகன் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் செய்தாரே! அது என்னவாம்?  “அவருடைய தந்தை கிரேக்கன் என அனைவரும் அறிந்திருந்ததால் அவ்விடங்களிலிருந்து யூதர்களின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார்” (அ.ப.16:3)
     அப்போஸ்தலன் என்றால் அனுப்பப்பட்டவன் என்று கிரேக்க மொழியில் பொருள். இச்சொல் பன்னிருவருக்கும் மட்டுமல்ல, மற்றவருக்கும் கூடப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் அல்ல. மதின்மர், பதினொருவர், பன்னிருவர், அப்போஸ்தலன் எனும் போது கிறிஸ்து தன்னுடன் வைத்திருந்து பழக்கிப் பொறுப்புடன் அனுப்பிய அப்போஸ்தலிக்கப் பதவியைக் குறிக்கிறது. இன்னும் சின்னப்பர் தன்னையும் அப்போஸ்தலன் எனும் போது, தான் கிறிஸ்துவைக் கண்டதாகவும், உயிர்த்த சேசுவுக்கு சாட்சியாயிருப்பதாகவும், இன்னும் புற இனத்தாருக்கென்று அனுப்பப்பட்டவராகவும் விளக்கம் சொல்லித் தன் பட்டத்திற்குக் காரணம் காட்டுகிறார். அதே சமயத்தில் அவருக்கு முன்னால் அப்போஸ்தலராய் இருந்தவர் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் கவனிக்க (கலா1. 17:2-9) தான் காலம் தவறிப்பிறந்தவர், மிகத் தாழ்ந்தவர் என்றும் சொல்வதை மறக்க வேண்டாம். திருச்சபையின் தூண்களானவர்கள் (கலா.2:9) கை கொடுத்ததால் இறைவன் அருள்படி அவர் புற இனத்தார் சபைகளைப் பொறுப்புடன் கவனித்து வந்ததாகக் காண்க. அவர் ஒன்றும் தான் தோன்றியுமல்ல, தனித்தியங்கியுமல்ல! இன்னும் பர்னபா என்பவரும் மற்ற சிலரும் (அந்த்ரோனிக்கஸ், ஜீனியஸ் ரோ.16:7) கூட அப்போஸ்தலர் என்று குறிப்பிடப்படுகின்றனர். (1கொ.4:9-13, 9:5, 15:7, இராயப் 3:2, யூதா 17) ஆவியின் கொடைகளில் ஒன்றாக அப்போஸ்தலத்துவம் கருதப்படுவதையும் (1கொரி 12:28) காண்க. மாறாக, அப்போலோ, தீத்து இன்னும் 72 சீடர் முதலியோருக்கு இப்பட்டம் கொடுக்கப்படாமலிருப்பதையும் கண்டு, பன்னிரு அப்போஸ்தலர் ஒரு தனி, மற்ற யாவரும் தனி எனக் கண்டு கொள்க.
     சின்னப்பருடைய அப்போஸ்தலத்துவமோ துணிச்சலான பேச்சோ, இராயப்பருடையவும் பன்னிருவருடயவும் அதிகாரத்தை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவர்கள் கை கொடுத்ததாலேயே, தான் பிற இனத்தவருக்கு அப்போஸ்தலர் ஆனதையும் அவரே சொல்வதைக் காண்க.
குறிப்பு : Peter, John, Paul  என்பவை காரணப்பெயர்களாகும். அவை இடுகுறிப் பெயர்களல்ல. எனவே தமிழாக்கம் செய்கையில் காரணத்தை உணர்த்தி இராயப்பர், அருளப்பர், சின்னப்பர் என்பது பொருத்தமான கத்தோலிக்க மரபாகும். இராயி என்பது அடித்தளப் பாறை. இதன் மேல் கட்டப்படும் கட்டிடம் நிற்கும் காலம் வரை இதுவும் நிலைத்து நிற்பதாகும். அதிலும் இது அசைந்து அழியாத அஸ்திவாரமாகும். இது இராயப்பரும் அவரது பதவியில் வரும் பாப்புமாரும் தவறாவரத்துடன் திருச்சபையை நடத்தி வருகிறார் என்பதை உணர்த்தும். சிலுவையடியில் தேவதாயும், அருளப்பரும் நிற்பதைப்பார்த்து சேசு அவர்களைத் தாயும் மகனுமாக்குகிறார். தாய் என்பது ஸ்திரி. மனுக்குலத்துக்கு ஏவாளைப் போன்ற தாய் அவள் என்பது உணர்த்தப்படும். ஏவாள் பாவத்துக்கும் மரியாள் மீட்புக்கும் தாயாவார். மீட்பு சிலுவையில் நிறைவேறுகிறது. இதனால் கிடைப்பது அருள். இந்த மீட்பும் அருளும் மனுக்குலத்துக்கு அருளப்பர் மூலம் தரப்படுகிறது. அருளப்பர் மனுக்குலத்தின் பெயரால் மாதா மூலம் அருளைப்பெறுகிறார். அவரில் மனித குலமே அருளைப்பெறுகிறது. எனவே அவர் அருளப்பர் எனப்படுவதே சரி. இதனால் மாதா நமக்கு அருள்வழியில் தாய் என்பது உணர்த்தப்படும். சவுல் திருச்சபையை உபாதித்தவர். அகாலமாகப் பிறந்த பிள்ளை போன்றவர். ஆனால் கிறிஸ்துவின் ஒலியால் மனம் திரும்பி, புற இனத்தவரின் அப்போஸ்தலராகி மேல்வான அனுபவங்களையும் பெற்றவர். இந்நிலையில் அவர் தமது மேன்மைகளைப்பறி பெருமை பாராட்டாமல் தமது முன்னைய இழிநிலையை நினைவில் இருத்தி, தமது பலவீனத்தில் இறைமகிமையைப் பறைசாற்றினார். தமது சிலுவையைப் பற்றி வெட்கப்படாமல் அதில் அறையுண்ட கிறிஸ்துவையே போதித்தார். இந்தக் கிறிஸ்தவப் புண்ணியத்தை நமக்கு உணர்த்துவதற்காக அவர் Paulus சின்ன அப்பர் எனப்படுவதே பொருத்தமாகும். இடுகுறிப்பெயராகத் தமிழ் படுத்துபவர் பாப்பானவரது தவறாவரத் தலைமைத்துவம், மாதா பக்தி, சிலுவை வாழ்க்கை ஆகிய அடிப்படைகளை மறைத்துத் தம் சொந்த சுகத்தையும் செல்வாக்கையும், நிலைநாட்டப்பாடுபடுவராயிருப்பதைக் கவனிக்கவும்.

No comments:

Post a Comment